August Special Events

01.08.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் கொடைக்கானல் வட்டார தையல் பயிற்சி தொடக்க விழா காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இறைவணக்க பாடலுடன், சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி விழா தொடங்கப்பட்டது. திருமிகு.ஞானசசிகலா வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். தையல் பயிற்சி மையத்தை நகர்மன்ற தலைவர் திருமிகு பா.செல்லதுரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தையல் பயிற்சி மாணவிகள் வரவேற்பு நடனம் ஆடினர். பிராவஸ்(Prowess) அமைப்பு திருமிகு.சாந்தி பெண்களாகிய நாம் எல்லா காரியங்களிலும் ஆண்களை சார்ந்து வாழாமல் சுய தொழிலினை கற்றுக்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டுமென்று கருத்துரை வழங்கினார். உதவி செயலர் தந்தை ஸ்டாலின் விரல்கள் மட்டுமே மூலதனம் என்ற கருத்தைக் கூறி கிடைக்கப்பெற்ற இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நல்ல முறையில் தையல் கற்றுக்கொள்ளுமாறு சிறப்புரையாற்றினார். எம்.எம்.எஸ்.எஸ்.எஸ். கொடைக்கானல் பகுதியில் 48 வருடமாக பணி செய்யும் நிலையில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான தொழில் பயிற்சி மூலம் தங்களின் தனித்திறனை மேம்படுத்தி நல்ல முறையில் பயிற்சி பெறுமாறும் அறிவுரை கூறினார். திருமிகு.காமேஸ்வரி நன்றி கூற நாட்டுப்பண் பாட நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

01.08.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் தையல் பயிற்சி தொடக்க விழா மற்றும் கணினி மைய சான்றிதழ் வழங்கும் விழா தேனி வட்டார அலுவலகத்தில் நடைபெற்றது. கும்ப ஆரத்தி எடுத்து, ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி, தையல் பயிற்சி அரங்கம் அர்ச்சிக்கப்பட்டு விழாவானது தொடங்கப்பட்டது. நாடகம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கணினி பயிற்சி மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.எலியாஸ் ராஜா அறிமுக உரையாற்றி விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களே அறிமுகம் செய்து வரவேற்றார். திருமிகு.விஜயலட்சுமி தையல் பயிலும் பெண்களுக்கு தையல் இயந்திரம் இலவசமாக பெறும் அரசு திட்டம் பற்றியும், தாட்கோ கடன் உதவி பெறும் திட்டம் பற்றியும் எடுத்துரைத்தார். பெண்களுக்கு உதவும் இணையதள முகவரியை பகிர்ந்து கொண்டார். எம்.எம்.எஸ்.எஸ்.எஸ். உதவி செயலர் தந்தை ராஜன் மூன்று மாவட்டங்களில் துவங்கப்பட்ட தையல் பயிற்சியில் பெண்கள் தான் சுயமாக முன்னேறி தொழில் செய்வதாக கூறினார். தையல் பயிற்சி மூலம் தானே உருவாகி பிறரை உருவாக்குமாறும், தையல் பயிற்சி விதிமுறைகள் பற்றி கூறினார். கணினி மைய மாணவ மாணவிகளுக்கு கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது போல மேலும் பயிற்சி பெற்று படித்து முன்னேறுமாறு அறிவுறுத்தினார்.

11.08.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் மைய அலுவலகத்தில் கோல்பிங் இந்தியா பயனாளர்களின் நல்வாழ்வுக்கான கடன் உதவி வழங்கும் திட்டம் காலை 11.00 மணிக்கு மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இறைவணக்கப் பாடலுடன் விழா தொடங்கியது. செயலர் தந்தை கபிரியேல் வரவேற்புரை வழங்கி, கோல்பிங் கடனுதவி திட்டத்தை பற்றி எடுத்துரைத்தார். கோல்பிங் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்கள் தங்களது வட்டாரங்களில் செயல்படுத்தி வரும் கோல்பிங் திட்டங்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர். வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 03 நபருக்கும், பால்மாடு திட்டத்தின் கீழ் 09 நபருக்கும், தனிநபர் கழிவறை திட்டத்தின் கீழ் 07 நபருக்கும் காசோலை வழங்கப்பட்டது. சங்கத்தின் துணைத்தலைவர் பேரருட்தந்தை ஜெரோம் எரோணிமுஸ் செயலர் தந்தையின் பணி மற்றும் நோக்கம் குறித்து பாராட்டினார். கடனுதவி சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், அதை முறையாக திருப்பி செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மதுரை மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றி வரும் சங்கங்களில் நமது சங்கமும் ஒன்று என்பதை கூறி வாழ்த்தினார். கோல்பிங் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.எலியாஸ் ராஜா நன்றி கூற நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

12.08.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அருப்புக்கோட்டை வட்டார அலுவலகத்தில் தையல் பயிற்சி தொடக்க விழா காலை 11:30 மணிக்கு நடைபெற்றது. அருப்புக்கோட்டை பங்கு தந்தை தாமஸ் எடிசன் உதவி செயலர் தந்தை ஸ்டாலின் இணைந்து ரிப்பன் வெட்டி இறை வேண்டல் செய்து மையத்தை துவங்கி வைத்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமிகு பொருட்செல்வி அனைவரையும் வரவேற்றார். கைத்தொழில் பயிற்றுனர் திருமிகு கவிதா ஒவ்வொரு பெண்ணும் கைத்தொழிலினை கற்றுக் கொண்டால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவோம் என்ற கருத்தை கூறினார். சமூகநல அலுவலர் திருமிகு பாண்டியம்மாள் சமூக நலத்திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார். அருப்புக்கோட்டை பங்குத்தந்தை இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்துமாறு அறிவுறுத்தினார். உதவி செயலர் தந்தை பயிற்சி பெற்று கற்றுக் கொள்வதோடு நிறுத்தி விடாமல் சேமிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்றும் வாழ்த்துரை வழங்கினார். தையல் பயிற்சி ஆசிரியர் ஞானம் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது